ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் 11 பேரிடம் மறு விசாரணை
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் 11 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ் கார்டன் ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நீதிமன்ற வழக்கால் ஆணையத்தின் விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் 7-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போலோ மருத்துவர்கள் 11பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், மறு விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்போலோ மருத்துவர்கள் 11 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மருத்துவர்கள் தவபழனி, செந்தில்குமார் ஆகியோர் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது. அப்போலோ மருத்துவர்களிடம் இன்றும், நாளையும் மறு விசாரணை நடத்தப்படுகிறது.
இதற்கிடையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. அதன்படி, 90 சதவீத விசாரணை முடிந்துள்ளது. விசாரணை அறிக்கை அரசிடம் விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.