ஆப்கனில் அனைத்து மாணவிகளும் பள்ளிக்கு செல்ல தலிபான்கள் அனுமதி
ஆப்கானிஸ்தானில் மார்ச் 21 முதல் அனைத்து மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது முதல் பெண்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கான் பெண்கள் தலிபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் விளைவாக உலக நாடுகள் தலிபான்கள் தலைமையிலான அரசுக்கு கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான சில கட்டுபாடுகளை தலிபான்கள் தளர்த்த தொடங்கினர்.
அந்த வகையில் சில மாகாணங்களில் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், பெரும்பாலான மாகாணங்களில் 7-ம் வகுப்புக்கு மேலே உள்ள வகுப்புகளில் மாணவிகள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. தலைநகர் காபூலில் தனியார் அனைத்து பல்கலைக் கழகங்கள், உயர்நிலை பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவிகள் கல்வி பயில எந்த தடையையும் தலிபான்கள் விதிக்கவில்லை. ஆனால், நாட்டின் பிற மாகாணங்களில் மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், வரும் மார்ச் 21-ம் தேதிக்கு பின்னர் மீண்டும் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தலிபான்கள் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கலாசார துறை அமைச்சர் கூறுகையில், ஆப்கானிஸ்தான் புத்தாண்டை தொடர்ந்து வரும் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.