மேட்டூர் காவிரியில் ஆடி 1ல் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆடி 1ஆம் தேதி மேட்டூர் காவிரியில் ஏராளமானோர் நீராடி செல்வார்கள். புதுமணத்தம்பதியர் அருகம்புல் வைத்து நீராடுவதோடு தங்களின் திருமண மாலைகளை பூஜித்து காவிரியில் விட்டுச்செல்வார்கள். சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வார்கள்.
இதனால் அணைக்கட்டு முனியப்பனை தரிசிக்கவும் அணை பூங்காவை சுற்றி பார்க்கவும் வழக்கத்தை விட அதிக மக்கள் கூடுவார்கள். தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமானால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் 17.07.2021 மற்றும் 18.07.2021 ஆகிய இரு தினங்களிலும் மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் ஆடி 1ல் காவிரியில் நீராடுதல் போன்ற நிகழ்வுகளுகம் தடை செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவராஜன் வேண்டுகோளை ஏற்று மேட்டூர் சார் ஆட்சியர் பிரதாப் சிங் இதற்கான உத்திரவை பிறப்பித்துள்ளார்.