அமெரிக்காவின் டாலஸ் நகரின் யூத வழிபாட்டுத் தலத்தில் 4 பேர் சிறைபிடிப்பு: தீவிரவாதியை சுட்டுக் கொன்று பிணைக் கைதிகள் விடுதலை
அமெரிக்காவில் யூத வழிபாட்டுத் தலத்தில் 4 பேரை சிறைபிடித்த தீவிரவாதியை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப்படை வீரர்கள் 4 பேரையும் விடுவித்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், டாலஸ் நகரில் உள்ளயூதர்களின் வழிபாட்டுத் தலத்தில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிஅளவில் பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது துப்பாக்கியுடன் நுழைந்த தீவிரவாதி, போதகர் சார்லி உட்பட 4 பேரை பிணைக் கைதியாக பிடித்தார். தகவல் அறிந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ அதிகாரிகள், அதிவிரைவுப் படை வீரர்கள் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். அவர்கள் தீவிரவாதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பெண் தீவிரவாதி ஆபியா சித்திகியை விடுதலை செய்யுமாறு தீவிரவாதி நிபந்தனை விதித்தார்.
சுற்றுவட்டாரப் பகுதிகளில்வசித்த மக்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டனர். இதைத் தொடர்ந்து வழிபாட்டுத் தலத்துக்குள் நுழைந்த அதிவிரைவுப்படை போலீஸார் 11 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீவிரவாதியை சுட்டுக் கொன்று 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
ஆபியா சித்திகி யார்?
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த ஆபியா சித்திகி (49) கடந்த 1990 முதல் 2001 வரை அமெரிக்காவில் வசித்தார். அப்போது அல்-காய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். பாகிஸ்தானின் முகமது அஜ்மத் கானை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2002-ல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்குதிரும்பி, பிறகு தலைமறைவானார்.
அமெரிக்காவுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த ஆபியா திட்டமிட்டிருப்பதை அறிந்த எப்பிஐ அமைப்பு, அவரைதேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. கடந்த 2008-ல் ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டுகளுடன் அவர் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் மீதான வழக்குகளை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டில் அவருக்கு 86 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. டெக்சாஸ்மாகாணம் போர்ட் வொர்த் சிறையில் ஆபியா அடைக்கப் பட்டுள்ளார்.