தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, லஞ்சமாக வாங்கிய பணத்துடன் பிடிபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது

34views
விருதுநகர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலணாய்வு பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் முருகசெல்வம் (40). ரேசன் அரிசி மூடைகளை முறைகேடாக பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபடும் அரிசி விற்பனையாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களை மிரட்டி, முருகசெல்வம் லஞ்சமாக பணம் பெற்று வருவதாக ஏராளமான புகார்கள் வந்தது. எனவே விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து முருகசெல்வத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று, சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகசெல்வம் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஒருவரிடம் லஞ்சமாக பணத்தை வாங்கி கொண்டு காரில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திருவில்லிபுத்தூர் – அழகாபுரி சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முருகசெல்வம் வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்தக் காரில் முருகசெல்வம் கொண்டு வந்த 4 லட்சத்து, 35 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு முறையான கணக்கு எதுவும் இல்லாததால், அந்தப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லஞ்சப்பண வசூலில் ஈடுபட்டு வந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகசெல்வத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!