தமிழகம்

திமுக கட்சிக்கு கட்டம் சரியில்லை. அதிமுக கட்சிக்கு ஏறுகட்டம் : சிவகாசியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பேச்சு

39views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற இருக்கும், அதிமுக கட்சியின் வீரவரலாறு பொன்விழா மாநாடு குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, மதுரையில் நடைபெற உள்ள பொன்விழா மாநாடு நமக்கெல்லாம் எழுச்சி மாநாடு. இதில் விருதுநகர் மேற்கு மாவட்டத்திலிருந்து மட்டும் சுமார் 10 ஆயிரம் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு, எடப்பாடியாரின் பொற்காலம் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்க வேண்டும். கழகத்தின் எதிர்காலமும், நம்பிக்கையும் எடடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான். பிரதமரின் அருகில் அமரும் அளவிற்கு எடப்பாடியார் தன்னை வளர்த்திருக்கிறார். அதிமுக கட்சியையும், ஆளும் தேசிய கட்சி மதிக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்து கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், பிரதமரை வரவேற்கும் வாய்ப்பினை எடப்பாடியார் பெற்றிருக்கிறார். மேலும் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது பிரதமருக்கு அருகில் ஒரு பக்கம் பாஜக தேசிய தலைவர் நட்டா, மறுபக்கம் அதிமுக பொது செயலாளர் அண்ணன் எடப்பாடியார். இது அதிமுக கட்சிக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம். மதுரையில் நடைபெற இருக்கும் அதிமுக மாநாடு, திமுக ஆட்சிக்கு மிகப்பெரும் பயத்தை உருவாக்க வேண்டும். அதிமுக தொண்டர்களின் எழுச்சியைப் பார்த்து, அடுத்து அதிமுக ஆட்சி தான் என்று தமிழக மக்கள் கூற வேண்டும்.
தற்போது திமுக கட்சிக்கு கட்டமும் சரியில்லை, நேரமும் சரியில்லை. அதிமுகவிற்கு ஏறுகட்டம் ஆரம்பமாகி விட்டது. எடப்பாடியார் ராசியும் அருமையாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியின் நான்கரையாண்டு ஆட்சி காலம் பொற்காலமாக இருந்தது என்று பொதுமக்கள், சாமானிய மக்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர்கள் கூறுவதை கேட்க முடிகிறது. மக்கள் அதிமுக கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டனர்.  இதனை மதுரை மாநாடு உறுதிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் திருவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சந்திரபிரபா, ராஜவர்மன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!