தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் நாடாளுமன்ற மரபை மீறி துவக்கத்திலேயே தனது ஜனநாயக விரோத போக்கை காட்டி இருக்கிறது பாஜக. நவாஸ்கனி எம்பி கண்டனம்
63
18 வது மக்களவைக்கு தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கொடிக்குண்ணில் சுரேஷ் அவர்களை தவிர்த்து, பாஜகவை சார்ந்த ஏழு முறை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பர்த்ருஹரி மஹ்தாப் அவர்களை நியமித்து நாடாளுமன்ற மரபை மீறி துவக்கத்திலேயே ஜனநாயக விரோத போக்கை கையில் எடுத்திருக்கும் பாஜக அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிக முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த உறுப்பினரே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற மரபு.
தொடர்ந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற மரபையும் மீறும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜக அரசு 18 வது மக்களவையில் துவக்கத்திலேயே ஜனநாயக விரோத போக்கை கையில் எடுத்திருக்கிறது.
ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் சபாநாயகராக அமர்ந்து பதவிப்பிரமாணம் செய்வதை பாஜக அரசு விரும்பவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
பாஜக அரசின் இத்தகைய ஜனநாயக விரோத போக்கிற்கு ஜனநாயக சக்திகள் இணைந்து ஆரம்ப நிலையிலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத்தலைவர் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.