தமிழகம்

“மக்களின் பல்வேறு பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து” எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு.

51views
மக்களின் பல்வேறு பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.  அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதில் சுந்தர காண்டம் என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர் ராஜன் சொற்பொழிவாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, அயோத்தி ஸ்ரீ ராமபிரான் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது 500 ஆண்டு காலத்தில் ஒரு அற்புதமான ஒரு காலம் இது சூரியவம்சத்தில் பிறந்தவன் ஸ்ரீ ராமன் அவனது காலத்தில் மிக துன்பமான காலம் சீதா தேவியை பிரிந்தது அந்த காலத்தில் ஸ்ரீ ராமனுக்கு மிகவும் உதவியவர் ஆஞ்சநேயர்.  ராமாயணத்தில் பல பகுதிகள். அதில் அனுமன் சீதையை தேடிச் செல்லும் பகுதியே சுந்தர காண்டம் எனப்படுகிறது. இது இதிகாசம் மட்டுமல்ல.. இதை சொல்பவர் கேட்பவர் பெரும் நன்மைகளை அடைவர். அப்படி ஒரு வரசித்தி இந்த சுந்தர காண்டத்துக்கு உண்டு. இதை சுருக்கமாக ஐந்து நிமிடத்திலும் பாராயணம் செய்யலாம். 5 நாட்களுக்கும் இதை அணு அணுவாய் வியக்கலாம்.
இன்றும் பல வித பிரார்த்தனைகளுக்கு சுந்தர காண்டம் மாமருந்தாக திகழ்கிறது. இதில் சுந்தரன் அனுமனே.  அனுமன் வானர இனத்தவன். ஆயினும் வரசித்திகள் மிகுந்தவன். தேவர்கள் அவ்வளவு பேரும் வரிசையில் நின்று அனுமனுக்கு வரங்களை அளித்து அவனை பெரும் சக்திமான் ஆக்கிவிடுகின்றனர்.  ஆயினும் அனுமன் அந்த சக்திகள் எதையும் தன் நலத்துக்கு பயன் படுத்தாமல் ஸ்ரீராமன் நிமித்தம் – நல்லதற்கே பயன் படுத்தினான்.  அனுமனாலேயே சீதை இருக்கும் இடம் ராமனுக்கு தெரிய வருகிறது. ஸ்ரீராம தூதுவனாக அனுமன் ராவணனை சந்திக்கும் கட்டமும், அப்போது ராவணனுக்கு அனுமன் சொல்லும் புத்தி மதிகளும் மிக ஆழமானவை. இதனால் அனுமனை தமிழ் சான்றோர் உலகம் சொல்லின் செல்வன் என்கிறது.
இந்த சொல்லின் செல்வனோ ஸ்ரீராமனுக்கு துணை புரியவே அவதரித்தவன். சிரஞ்ஜீவி என்கிற அழியா வரம் பெற்றவன். யுகங்கள் கடந்தும் வாழ்ந்து வருபவன். இன்றும் ராமநாப ஜெபம் நடைபெறும் இடங்களில் அனுமன் சூட்சமமாக நடமாடுகிறான்.  மனித மனம் குரங்கு போல் தாவும் தன்மை உடையது. அதை அடக்கினால் மலையையே அசைக்கும் சக்தி அதற்கு வந்துவிடும். சக்திமிகுந்த மனங்கள் எல்லாமே அனுமன் வாழும் மனங்களாகும். அனுமன் மனோ சக்தியின் வடிவாகவும், பக்தி, பணிவுக்கு இலக்கணமாகவும் திகழ்பவன். இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!