ராஜபாளையம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை…..
திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள குடல்புரிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (34), மில்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (26). இவர்கள் இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள், கடந்த 2018ம் ஆண்டு, அந்தப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ வழக்குபதிவு செய்து காளிமுத்து, விஜய் இருவரையும் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காளிமுத்து மற்றும் விஜய் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
செய்தியாளர் வி. காளமேகம்





