தமிழகம்

6 மாநிலங்கள், 60,000 + வீரர்கள் பங்கேற்கும் “ஈஷா கிராமோத்சவம்”

39views
“55 லட்சம் பரிசுத் தொகையை அல்ல அற்புத வாய்ப்பு”
இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள ‘ஈஷா கிராமோத்சவம்’ இந்த ஆண்டு மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.   இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒட்டுமொத்தமாக 55 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பில் பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளன.
ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் 15வது முறையாக நடத்தப்படும் இத்திருவிழா இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி என மொத்தம் 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெற உள்ளது.   இதில் 25,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 60,000 க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக களம் காண உள்ளனர்.
இது தொடர்பாக ‘ஈஷா கிராமோத்சவம்’ குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா அவர்கள் கூறுகையில்,  “ஈஷா கிராமோத்சவம்”  என்பது மற்ற அமைப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து பெரிதும் வேறுபட்ட ஒன்றாகும்.   இதில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் விளையாடும் விளையாட்டு வீரர்கள், பல்கலைக்கழக வீரர்கள், தொழில் முறை வீரர்கள் என ஏற்கனவே சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அனுமதி இல்லை.  ஒவ்வொரு கிராமத்திலும்  அந்தந்த கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றினைந்து  ஒரு அணியை உருவாக்கி இப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்.
இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும்   ஒரு புதிய அணி உருவாக்கவும் பழைய அணிகள் மீண்டும் புத்துயிர் பெறவும் வாய்ப்பு உள்ளது.  அணியை உருவாக்கி குழுவாக  சேர்ந்து பயிற்சி எடுக்கும் செயல்முறையின் மூலம் இளைஞர்களின் தலைமை பண்பும் ஒற்றுமை உணர்வும் அதிகரிக்கும்.
இது தவிர 14 வயதை கடந்த யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்க முடியும் என்பதால்,  பல ஆண்டுகளாக விளையாட வாய்ப்பின்றி இருந்த குடும்பப் பெண்களும், முதியவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் போட்டிகளில் இருந்து பெறுவார்கள்.  இதன் மூலம் ‘வெற்றி’ என்ற ஒற்றை பலனை தாண்டி, கிராமத்தின் சமூக ஒற்றுமை, ஆரோக்கிய மேம்பாடு, பெண்களின் சுயசார்பு தன்மை என பல அம்சங்களை பயன்களாக பெற முடியும்.
இளைஞர்களை போதை பழக்கங்களில் இருந்து வெளிக் கொண்டு வந்தது,  கிராமப்புற பெண்களை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்தது, சாதிய  வேறுபாடுகளை கடந்த ஒற்றுமை மனநிலையை உருவாக்கியது என பல மாற்றங்களை இத்திருவிழா சாதித்து காட்டியுள்ளது.
விளையாட்டுப் போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் உற்சாகத்தையும், புத்துணர்வை யும் உருவாக்குவது தான் ஈசா கிராமோத்சவத்தின் அடிப்படை நோக்கம்.  சத்குரு அவர்களால் 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத் திருவிழா,  வெறும் நான்கு தாலுக்காக்களில்  ஆரம்பித்து படிப்படியாக இப்போது தென்னிந்திய அளவில் நடத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.  இதுவரை 8,412 அணிகளும் சுமார் 1 லட்சம் வீரர்களும் கிராமோத்சவ  போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்” என்றார்.

மேலும்,  இந்த ஆண்டு போட்டிகள் குறித்து பேசுகையில்,  “ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி என மொத்தம் 4 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.  இறுதிப் போட்டியில்  வெற்றி பெறும்  அணிகளுக்கு வாலிபால் (ஆண்கள்) ரூ 5 லட்சம்,     த்ரோபால் (பெண்கள்) ரூ 2 லட்சம், கபடி (ஆண்கள் ) ரூ 5 லட்சம்,  கபடி (பெண்கள்) ரூ 2 லட்சம் என மிகப் பெரிய பரிசு தொகைகள் சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கப்படும்.   இது தவிர கிளெஸ்டர், டிவிஷனல் அளவில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கும் பரிசு தொகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  மேலும், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் அணியில் இடம்பெறாத மக்கள் பங்கேற்று  மகிழ்வதற்காக பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
இந்த ஆண்டுக்கான போட்டிகள் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும்.  இறுதிப்போட்டிகள் கோவையில் உள்ள புகழ்பெற்ற ஆதியோகி முன்பு மிகப் பிரமாண்டமாக நடைபெறும்.  இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் http://isha.co/gramostsavam-tamil என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.  கூடுதல் தகவல்களுக்கு 8300030999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.
இத்திருவிழாவை  நடத்தும் ஈஷா அவுட்ரீச் அமைப்பு,  மத்தியில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறையிடம் இருந்து தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பு (National Sports promotion Orgganization) என்ற  அங்கீகாரத்தை பெற்றுள்ளது.  மேலும் 2018 ஆம் ஆண்டு ‘ராஷ்ட்ரிய கேல் புரோத்ஸாஹன் புரஸ்கார்’ என்ற உயரிய விருதை அப்போதைய மாண்பு மிகு பாரத குடியரசுத் தலைவர்,  ஈஷா அவுட் டீச்சிற்கு வழங்கி கௌரவித்துள்ளார்.  மேலும்,  இத் திருவிழாவின் இறுதிப் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், மிதாலி ராஜ், பிவி சிந்து, ஸ்டிக்கர் தவான்,  வீரேந்திர சேவாக் போன்ற விளையாட்டு துறை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!