173views
முனைவர் என்.பத்ரி
சர்வதேச மனித ஒற்றுமை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 20 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், உலகநாடுகளில் வறுமையைக் குறைத்தல், நாடுகள் தங்களின் நிலையான வளர்ச்சியை அடைய புதிய முனைப்புகளை எடுத்துக் கொள்ளுதல், உலகளாவிய ஒற்றுமையின் தேவையை உணர்ந்து செயல்படுதல் போன்றவற்றை வலியுறுத்தும்விதமாக அமைந்துள்ளது. இந்த நாளில், மனிதர்கள் தங்களிடையே உள்ள வேறுபாடுகளைக் கடந்து, பொதுவான இலக்குகளை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துத்துவத்தையும் உணர்த்துகிறது.
உலக நாடுகள் தங்களின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஒற்றுமையின் மதிப்பை எடுத்துக்காட்டுவதற்கும், பன்முகத்தன்மையில் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கும் உலகளாவிய கொண்டாட்டமாக டிசம்பர் 22, 2005 அன்று ஐ.நா.வால் இந்த நாள் உருவாக்கப்பட்டது.
மனித சமூகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும், மட்டங்களிலும் ஒற்றுமையின் கலாச்சாரத்தை வளர்த்தல்,உலகளாவிய வறுமையை ஒழித்தல், அது சார்ந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவித்தல்,சமூக மேம்பாடு, மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை உருவாக்குதல் போன்றவையும் இதன் முக்கிய நோக்கங்களாகும்.
இந்த நாள், சமூகங்களுக்கிடையேயான பன்முகத்தன்மையை மதித்து, அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக மனிதர்களை ஒன்றிணைக்க ஒரு நினைவூட்டலாக செயல்படுகிறது. ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும், உலகின் வேற்றுமையால் ஒன்றுபட்ட தன்மையைக் கொண்டாடவும் வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
வறுமை, சமத்துவமின்மை மற்றும் சமூக அநீதி உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வை ஊக்குவிப்பதன் தேவையை இந்த நாள் நம் அனைவருக்கும் உணர்த்துகிறது. தற்போது நாடுகளிக்கிடையே காணப்படும் போர்களையும் தீவிரவாதத்தையும் குறைக்கவும் இந்த நாள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வறுமைக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாக உதவுவதையும் மனித வளர்ச்சியை முன்னேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு ஐ.நா.வால் உலக ஒற்றுமை நிதியம் நிறுவப்பட்டது. இந்த நாளைக் கடைப்பிடிப்பது, மக்கள் மற்றும் நாடுகளிடையே உலகளாவிய ஒற்றுமை கலாச்சாரத்தை வளர்ப்பதில் ஐ.நா.வின் அர்ப்பணிப்பை நினைவூட்டுவதாகும். மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது.
இந்த நாள் நமது பகிரப்பட்ட மனிதநேயத்தையும், நாம் அனைவரும் ஒரு உலகளாவிய சமூகத்தின் ஒரு பகுதியினர் என்ற நம் உணர்வையும் அங்கீகரிக்கிறது. பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாட மக்களை ஒன்றிணைக்கும் அதே வேளையில், சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்தின் கடமையையும் இது நினைவூட்டுகிறது. வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கும் உலகளவில் சமூக நீதியை முன்னேற்றுவதற்கும் புதிய முயற்சிகளை இந்த நாள் ஊக்குவிக்கிறது. இந்த நாள் தனிநபர்கள் சமூக சேவையில் ஈடுபடவும், தொண்டு நோக்கங்களை ஆதரிக்கவும், சமத்துவத்தையும் நீதியையும் மேம்படுத்தும் முறையான மாற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் ஊக்குவிக்கிறது.
இந்த நாளில் பசி, வறுமை, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கியமான உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு நன்கொடைகளை பெற்று தங்கள் பணிகளை சிறப்பாக செய்யஊக்குவிக்கப்படுகின்றன.பிராந்திய அல்லது உலகளாவிய அமைப்புகளுடன் தன்னார்வத் தொண்டு செய்வது சமூக உணர்வையும் பகிரப்பட்ட பொறுப்பையும் வளர்க்கிறது. சமூக ஊடக பிரச்சாரங்கள் அல்லது சமூக விவாதங்களைப் பயன்படுத்தி, முக்கியமான உலகளாவிய கவலைகள்ப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலம் ஒற்றுமையின் அவசியத்தை நாடுகள் உணரமுடியும். இந்த நாளின் பல்வேறு நிகழ்வுகள் மூலம் பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைப்பது கலாச்சாரங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பது போன்றவை சாத்தியமாகின்றன.
மேலும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றிய உண்மைநிலையை அறிந்துகொண்டு,அவற்றிற்கு சாத்தியமான தீர்வுகளைப் பற்றிப் பேசுவதன் மூலமும் மக்கள் குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றத்தை காண முடியும்.
நாம் எதிர்கொள்ளும் அவசர சவால்களைச் சமாளிப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய, இரக்கமுள்ள உலகத்தை உருவாக்குவதற்கும் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதற்கும் இந்த நாள் மிகவும் முக்கியமாகும். இந்த நாளை நாம் சிந்திக்கும்போது, மனிதகுலத்தின் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையான கொள்கைகளான ஒத்துழைப்பு, பச்சாதாபம் மற்றும் பரஸ்பர ஆதரவு ஆகியவற்றின் மதிப்புகளுக்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பித்துக் கொள்வோம்.
முதலில் குடும்பங்களில் தோன்றும் ஒற்றுமையே உலக நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமைக்கு அடிப்படை என்பதை நாம் உணர வேண்டும்.எனவே, இந்த நாள் நமது மற்றவர்களிடம் அன்பு பாராட்டும் நம் நற்குணம் நம்மிலிருந்து முதலில் தொடங்கட்டுமே.
add a comment






