கட்டுரை

ஆறாம் ஆண்டை கடந்து வெற்றிகரமாக பயணிக்கும் அன்பு இணைய வானொலி

193views
அன்பு வானொலி ஜனவரி 17, 2017 திருப்பூர் மற்றும் கோவையில் தனது பயணத்தை துவங்கி தற்போது 6 ஆம் ஆண்டை நோக்கி தமது வெற்றி பயணத்தை துவங்கியுள்ளது. அன்பு வானொலியின் அளப்பரிய சாதனைகள்.
ஊடகம் இன்று மக்களோடு அன்றாட நிகழ்வுகளில் கலந்து விட்ட ஒன்று, அதிலும் சமூக வலைதளங்கள் உடலில் ஒரு உறுப்பு போல பின்னிப்பிணைந்த நிலையில் ஒரு தகவல் தொழில்நுட்ப புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் காலகட்டத்தில் உள்ளங்கையில் உலகம் அடங்கி,அறிவு தொட்டுவிடும் தூரத்தில் வந்துவிட்டது. இப்படி ஒரு பரபரப்பான காலகட்டத்தில் ஒரு இணையதள வானொலி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை சென்று சேர்ந்துள்ளது. தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளது என்றால் அது அசாத்தியமானது. ஆம் அந்த அசாத்தியயத்தை சாத்தியமாக்கி சாதனையை நிகழ்த்தியுள்ளது ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் அன்பு வானொலி.
பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த வானொலி, இன்று தொடுதிரை வழியே கண்டங்களை, கடல்களை கடந்து எட்டு திசையும் கேட்டிடும் வசதியை இணையம் ஏற்படுத்தி தந்துள்ளது. தன்னுடைய படிப்படியான வளர்ச்சியின் மூலம்  முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு, தனித்துவமாக திகழ்கிறது அன்பு வானொலி.  அன்பு பேரக் கேட்டாலே சும்மா இழுக்குதில்ல.. என்பது போல் அன்பு என்ற அந்த பெயருக்காகவே இந்த வானொலி பல நேயர்களை தன்வசம் ஈர்த்துள்ளது.
வர்த்தகம், வருமானம், லாப நோக்கோடு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஊடகங்கள் மத்தியில் எந்தவித வர்த்தக நோக்கம் இல்லாமல், வருமானம் இல்லாமல், விளம்பரம் இல்லாமல், ஒரு வானொலி இயங்க முடியும் என்றால் அது அன்பு வானொலி மட்டுமே. அதன் அசாத்திய சாதனையை கண்டுவிடலாம். தெய்வீக ராகம், இசைத்தென்றல், மாலைத்தென்றல், அன்பு ராகம், அன்றாட நிகழ்வுகளின் அலசல், தேனிசைத் தென்றல், தமிழோடு உறவாடு, காற்றோடு கவிதை, இரவில் வெளிச்சம், புதிய கீதம், கற்றது கையளவு, நட்சத்திரங்களின் நேர்காணல்., இப்படி அன்பு வானொலியின் நிகழ்ச்சியில் தலைப்புகளே சுண்டி இழுக்கும் வகையில் அமைந்திருப்பது அதன் தனித்துவம்.
வானொலியில் தங்களுடைய பெயர் உச்சரிக்கப்பட்டு விடாதா? நமது விருப்ப பாடலும் காற்றில் கலந்து விடாதா? என ஏங்கிக்கொண்டிருக்கும் நேயர்கள் மத்தியில், நேயர்களுக்காகவே நிகழ்ச்சிகளை உருவாக்கி, அவர்களை குடும்ப உறுப்பினர்களாக பார்க்கும் பண்பு கொண்டது தான் அன்பு வானொலி. ஆன்மீகம்,கலை, இலக்கியம், அறிவியல், மொழி,கல்வி,பேச்சு, பாட்டு, கவிதை, செய்திகள்,சமூகம், நாட்டுப்புற பாடல், என பல்சுவை கொட்டிக் கிடக்கிறது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும். 100க்கும் மேற்பட்ட சின்னத்திரை, வெள்ளித்திரை, ஆளுமைகளை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்திருக்கிறது. நேயர்களை கவிஞர்களாக, பாடகர்களாக, பேச்சாளர்களாக உருவாக்கியுள்ளது. 200க்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடகர்களின் அறிமுகம் 250க்கும் மேற்பட்ட கவி ஆளுமைகளின் அறிமுகம். ஆர்வமிருந்தால் நீங்களும் RJ ஆகலாம், என்ற தத்துவத்தோடு 150க்கும் மேற்பட்ட தொகுப்பாளர்களை உருவாக்கியுள்ளது. நுனி நாக்கில் பேசிடும் ஆங்கிலமே அழகு என்று நினைப்பவர் மத்தியில் தமிழுக்காகவே ஒரு வானொலி, தமிழ் நிகழ்ச்சிகளை மட்டும் ஒலிப்பரப்பும் வானொலியாக திகழ்கிறது அன்பு வானொலி.
சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்கால இலக்கியம், கவிதை, பேச்சு, சிறுகதை, தூய தமிழ்ச்சொற்கள் அறிமுகம், கவிஞர்களின் நேர்காணல், என இப்படி இன்னும் நீள்கிறது அன்பு வானொலியின் தமிழ் தொண்டு. அன்றாட நிகழ்வுகளை அனுதினமும் அலசுகிறது. இந்த அசாத்திய வெற்றிக்கு சாத்தியமானவர்கள் யார்? வர்த்தக நோக்கோடு சிந்திக்காமல், சேவை நோக்கோடு சிந்தித்து முழு சுதந்திரத்தோடு இயங்க அனுமதித்து கொண்டிருக்கும் இயக்குனர், தன்னலம் கருதாது பொதுநலம்கருதி, வருமானத்தை பெருக்காமல், திறமையைப் பெருக்கி, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அத்தனை ஆகச் சிறந்த தொகுப்பாளர்கள் மற்றும் தங்களின் வீட்டுப் பிள்ளையாக கொண்டாடி மகிழும் அன்பு வானொலியின் உயிர்நாடியான அன்பு நேயர்களே காரணம்.
விளம்பரதாரர்கள், பத்திரிகைகள்,தொலைக்காட்சி,சமூக ஊடகத்தோழமைகள் அனைவாின் பேராதரவுடன் பல ஆண்டுகள் கடந்து சாதனைகள் படைக்கும் அன்பு வானொலி இன்னும் பல வெற்றிகளைப் பெற்று நடைபோட்டு பயணிக்க நான் மீடியாவின் வாழ்த்துக்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!