தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

146views
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் எனும் பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் முனைவர் மு. பவானி வரவேற்றுப் பேசினார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் இரா. சேதுராமன் நோக்கவுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெ. இராமதாஸ் தலைமையுரை ஆற்றினார். நாகம்பட்டி BSNL இல் பணியாற்றி ஓய்வு பெற்ற ச. காளியப்பன், ஷபி டிரேடர்ஸ் பணியாளர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் மற்றும் பண்பாட்டுத் துறையில் பணிபுரியும் இணைப் பேராசிரியர் முனைவர் சீதாலட்சுமி நேரில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், ஆசிரியர் மாணவர் உறவு நிலை என்பது காலம்காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக இசையில் குரு சிஷ்யன் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. எந்தவொரு கல்வி நிறுவனமும் ஆசிரியர் மாணவர் உறவு நிலை சரியான முறையில் இல்லை என்றால் அந்த கல்வி நிறுவனமும், மாணவர்களும், சமூகமும் நல்ல வளர்ச்சியை அடையாது என்றும் தமிழ் இசை மற்றும் இசை நூல்களில் அவர்களின் உறவி நிலை எப்படி இருந்தது, இஅருந்து வருகிறது என்று பேசினார்.
இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மெய்யியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரியும் திரவியநாதன் திலீபன் மெய்நிகர் முறையில் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர் – மாணவர் என்ற நட்பு நிலை மாறி வருகிறது. ஆசிரியர் இல்லாமல் கற்றுக் கொள்ளக் கூடிய நிலை வந்துவிட்டது. ஆனால், இத்தகைய முறையில் பயிலும் மாணவனிடம் அன்பு, கருணை, இரக்க குணம் போன்றவற்றை எதிர்பார்க்க இயலாது என்று பேசினார்.
திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ. இராமலட்சுமி, நம் பண்டைய இலக்கியங்களை படைத்த சான்றோர்கள் அனைவரும் குரு சிஷ்யன் பரம்பரையில் வந்தவர்களே, தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களை படைத்தவர்கள் அவர்களே என்று கூறினார். சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கோ. லில்லி இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களின் நிலை பற்றி பேசினார்.

திசையன்விளை ம.சு.ப. கல்லூரி, திருநெல்வேலி ம.தி.தா. கல்லூரி மற்றும் STC கல்லூரி ஆய்வு மாணவர்கள், சங்கரன்கோவில் PMT கல்லூரி மற்றும் அரசு கல்லூரி, PSR கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முதலாமாண்டு தமிழ்த்துறை மாணவி நன்றி கூறினார். உதவிப்பேராசிரியர் முனைவர் மு. சித்ராதேவி கருத்தரங்கைத் தொகுத்து வழங்கினார். நாகம்பட்டி ஜெயலட்சுமி, உடற்கல்வி இயக்குநர் முனைவர் செ. கணேசன், திசையன்விளை மனோ கல்லூரி உதவிப்பேராசிரியர் பாலகிருஷ்ணன், சிவகாசி பிஎஸ்ஆர் உதவிப்பேராசிரியர் மாரியம்மாள் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கருத்தரங்கில கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சிறப்பு விருந்தினர்ளுக்கு முதல்வர் சான்றிதழ்களை வழங்கினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!