ஆன்மிகம்

எல்லோரும் எளிதில் செய்யலாம் “நவக்கிரக பரிகாரங்கள்”

84views
நமது வாழ்க்கைப் பாதை நன்கு அமையவும், நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லவும் நவகிரக நாயகர்கள் உதவுகின்றனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் தொடர்புடையவராக ஒவ்வொரு கடவுள் உள்ளார். சூரியனுக்கு சிவனும், சந்திரனுக்கு பார்வதியும், செவ்வாய்க்கு முருகனும், புதனுக்கு விஷ்ணுவும், குருவுக்கு தாட்சிணாமூர்த்தியும், சுக்கிரனுக்கு லட்சுமியும், சனிக்கு சனீஸ்வரரும், ராகுவுக்கு துர்க்கையும், கேதுவுக்கு விநாயகரும் வழிபடு தெய்வங்களாகின்றனர். இதுபோலவே நவகிரக பூஜை, மிருத்யுஞ்சய ஜெபம், லட்சுமி பூஜை உள்பட பல்வேறு யாகங்களும் நடத்தப்படுகின்றன.
இவை தவிர, நவகிரக தோஷம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன. இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.
காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல், வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.
நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.
தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.
கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.
கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தைக் கூட்டும்.
தோளில் செய்த மணிபர்ஸில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்.
நவகிரக திருத்தலங்கள்

வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)
வீட்டில் நுரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும். பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.
வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.
பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.
16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.
பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும், கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.
அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.
சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.
இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோஷம் நீங்கும்.
வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.
இரவில் படுக்கையில் தலை அருகே கீரை இலைகள் கொஞ்சத்தை வைத்திருந்து, அதனை மறுநாள் ஒரு பசுமாட்டிற்குக் கொடுக்கவும். இவ்வாறு மூன்று செவ்வாய்க்கிழமைகள் கொடுக்கவும். செவ்வாயினால் உண்டாகும் தோஷம் நீங்கும். ஆடுகளக்கு உணவளித்தலும் நன்று.
மேற்கண்டவை எல்லாமே எளிதான எல்லாரும் செய்யக்கூடிய பரிகாரங்கள். வசதி உள்ளவர்கள் ஹோமம் போன்ற சற்று செலவுள்ள பரிகாரங்களைச் செய்யலாம்.
அனைத்து கிரக தோஷத்திற்கும் நவகிரக ஹோமம் நல்லது. பாலாரிஷ்ட தோஷம், அற்ப ஆயுள் தோஷம் போன்றவற்றுக்கு ஆயுள் ஹோமம் சிறந்தது.
விபத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள், கண்டக தோஷம் போன்றவற்றை நிவர்த்தி செய்ய மிருத்யுஞ்சய ஹோமம் சிறந்தது.
எதிர்கள் தொல்லை, செய்வினை தொல்லைகள் உள்ளவர்கள்.
சுதர்சன ஹோமம் அல்லது மிருத்யுஞ்சய ஹோமம் செய்தல் நல்லது. இதே ஹோமங்களை மாரக தசா புக்திகள் நடக்கும் போதும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஏழரைச் சனி நடக்கும் போது நவகிரக ஹோமமும், கணபதி ஹோமமும் நடத்தினால் ஏழரைச் சனியினால் ஏற்படும் தடைகள் மட்டுப்படும்.
திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்யலாம்.
எதிரிகளை வெல்லவும், அரசியல் வெற்றிக்காகவும் சண்டி ஹோமம் செய்வர்.
வெள்ளிக்கிழமைகளில் கோ பூஜை செய்வது மகாலட்சுமியின் கடாட்சம் பெருக வழி செய்யும்.
மேற்கண்ட யாகங்களை ஹோமங்களை சொந்த செலவில் நடத்த முடியாதவர்கள், பொது இடங்கள், கோவில்களில் நடக்கும் போது அதில் கலந்து கொண்டு புண்ணியம் பெறலாம்.
விஷ்ணுவை மட்டுமே வணங்கும் வைஷ்ணவர்கள், சூரியனை வணங்க ராமரையும் சந்திரனை வணங்க கிருஷ்ணரையும், செவ்வாயை வணங்க நரசிம்மரையும், புதனுக்கு வேங்கடாசலபதியையம், குருவுக்கு வாமனரையும், சுக்கிரனுக்கு லட்சுமியையும், சனிக்கு கூர்ம அவதாரத்தையும், ராகுவுக்கு வராகரையும், கேதுவுக்கு மத்ஸய என்ற மீன் அவதாரத்தையும் வணங்கவும்.

 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!