தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் சூழலை பொதுமக்கள் உருவாக்கிவிட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மூன்றாம் அலை ஏற்படாத வகையில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
அதில், கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர, முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
கொரோனா என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றும் நோயாக இருப்பதால் அதை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை . முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகக் கருதப்பட்ட நாடுகளில் கூட மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது .
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது , கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்தது . தளர்வுகள் அறிவிக்கப்படும் போது லேசாகப் பரவத் தொடங்குகிறது . இதனைக் கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் .
கூட்டமாகக் கூடுவதன் மூலமாக , கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக் கூடாது என்று மீண்டும் , மீண்டும் உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் . மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்து விடாதீர்கள் என்பதை கொஞ்சம் கடுமையாகவே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் .
மூன்றாவது அலையை மட்டுமல்ல , எந்த அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வல்லமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது . அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏராளமாக தயார் நிலையில் உள்ளது . அதற்காக , கொரோனாவை விலை கொடுத்து வாங்கி விடக்கூடாது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் .
முதல் , இரண்டாம் அலைகளை விட மூன்றாவது அலை மோசமானதாக இருக்கும் , ஸ்பானிஷ் காய்ச்சலைப் போல இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்வதை பயமுறுத்தலாக இல்லாமல் நமக்கு தரப்படுகிற எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வோம் . ஜிகா வைரஸ் , டெல்டா , டெல்டா ப்ளஸ் என்று புதிய புதிய படையெடுப்புகள் சொல்லப்படுகின்றன . இவை அனைத்தையும் நாம் வெல்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.