தமிழகம்

தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

81views

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆலோசனை மேற்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இதனையடுத்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கும், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் பாராட்டு தெரிவித்த ஆளுநர், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜனும், உயிர் காக்கும் மருந்துகளும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஏற்ப சிறப்பு முகாம்களை அரசு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!