தமிழகம்

மறைந்த கவிஞர் அகவலன் எழுதிய ‘குடை பிடிக்காத துறவி’ ஹைக்கூ நூல் வெளியீடு

67views
சென்னை :
சென்னையில் நடைபெற்ற ‘ஹைக்கூ முற்றம்’ 11-ஆவது நிகழ்வு சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன் கீழ்த்தள அரங்கில் கடந்த ஞயிறு மாலை (மே 10) நடைபெற்றது.
மறைந்த கவிஞர் அகவலனுக்கான நினைவஞ்சலிக் கூட்டமும், அவரெழுதிய நூல் வெளியீட்டு நிகழ்வும், விருது பெற்ற கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கத்திற்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கவிஞர் ந.வேலாயுதம் தலைமையேற்றார். ‘ஹைக்கூ முற்றம்’ ஆலோசகர் கவிஞர் மு.முருகேஷ் அனைவரையும் வரவேற்றார்.
சமீபத்தில் மறைந்த கவிஞர் அகவலனைப் பற்றி கவிஞர்கள் சஞ்சீவி மோகன், அன்புத்தோழி ஜெயஸ்ரீ, புதுகை ஆதீரா, அ.ரமணி தேவி, வ.ரகுநாத், சா.கா.பாரதி ராஜா ஆகியோர் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
கவிஞர் அகவலன் இறப்பதற்கு முன்னர் எழுதிய கவிதைகள் அடங்கிய ‘குடை பிடிக்காத துறவி’ ஹைக்கூ கவிதை நூலினைக் கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் வெளியிட, ‘பொதிகை மின்னல்’ இதழாசிரியர் கவிஞர் வசீகரன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் நடைபெற்ற பாராட்டு அரங்கில், புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் நடத்திய ‘அறமனச் செம்மல்’ சீனு.சின்னப்பா இலக்கிய நூல் விருதுகள் போட்டியில், ஹைக்கூ நூல் பிரிவில் விருது பெற்ற கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கத்திற்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கவிஞர்கள் மு.முருகேஷ், உ.முத்துக்குமாரசாமி ஆகியோர் பாராட்டிப் பேசினர்.
இந்நிகழ்வில், கவிஞர்கள் செல்லம்மாள் கண்ணன், மேகலைவாணன், ப.திருமால், அனுராதா செளரிராஜன், அன்புச்செல்வி சுப்புராஜ், காசிநாதன், வழக்கறிஞர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!