109views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
வாய்ச்சவடால் வல்லரக்கர்கள்
வாய்களால் மென்று துப்புவதெல்லாம்
ஏவுகணைகள்…
ஏழையரைக் கொல்லும் சாவுகணைகள்…
கொலை வெறித் தாக்குதல்
பேச்சுக்களால் குவலயம் துண்டாட
நினைக்கிறார்கள்…
ஆங்கார ஓங்காரப் பேயாட்டங்கள் போல்
இவர்களின் அர்த்தனாரித்
தனங்கள்…
முன்வைக்கவும் முடியாமல்
முன் வைத்த காலைப்
பின் வைக்கவும் முடியாமல்
மூச்சுத் திணறி முக்கத்திணறும்
திமிர்களின் வாரிசுகள்…
பூமிக்கு பழுதாகிப் போன மனத்தரிசுகள்…
எப்போதும் அகந்தையின் வாசல்களை
சாத்தான்தான் திறந்து வைக்கிறான்…
தான் வாழ்ந்து பிறர் சாகடிக்கும்
கொலை வெறிக்கு
இவர்கள் வைக்கும் பெயர்
ராஜதந்திர சாணக்கியத்
தனங்கள்…
பூமி பொறுமையாளர்களுக்கானது..
அவர்களிடம் வீண் பேச்சுகளுக்கு
இடமில்லை…
எதிரிகள் திமிருகிறபோதும்
அடக்கி வாசிக்கிறார்கள்…
அதற்கான பதில்களை
மட்டுமே தருகிறார்கள்…
பாதங்களை இறைவன் சந்நிதானத்தில்
வைத்து விடுகிறார்கள்…
உண்மைக்கு
கர்வங்களின்
கால் பிடித்துப் பழக்கம் இல்லை…
ஆனாலும் அது உறுதியாய் நிற்கும்…
பொய்க்கால்
ஜோடனைகளைப் புறந்தள்ளும்…
இறை நம்பிக்கைகளின் வேர்கள்
ஆழமானவை…அதை
புல்லட்டுகளைக் கொண்டு
புரிந்து கொள்ள முடியாது…
மக்கள் நலன்…
தேச நம்பிக்கை…
இறை விசுவாசம்…
எதிரிகளிடம் மண்டியிடா மனத்துணிவு…
சாவுக்கு அஞ்சாமை…
இவை சத்தியத்தின் நெம்புகோல்கள்…
இப்படிப் பார்த்தால்
ஈரானுக்கு ஒரு போதும் சாவில்லை…
எதிர்த்து நிற்கும்
அமெரிக்க இஸ்ரேலிய
வல்லரக்கப் புல்லர்களுக்கு
ஒருபோதும் வாழ்வில்லை…
add a comment






