கவிதை

சர்வதேச மகிழ்ச்சி தினம்

24views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
என்றைக்கு இந்த நாட்டில்
ஏழை சிரிக்கிறானோ….
என்றைக்கு உழவன்
வயிறார உண்கிறானோ…
என்றைக்கு ஒரு பெண்
நள்ளிரவிலும் தனியாக
நடந்து போக முடிகிறதோ…
என்றைக்கு தாழ்த்தப்பட்டவனும்
கல்வியால் தலைநிமிர்கிறானோ…
என்றைக்கு நீதியும் நேர்மையும்
இல்லாதவன் கைகளுக்கும்
எளிதாக எட்டுகிறதோ…
என்றைக்கு நல்லவர்கள்
நாடாள வருகின்றார்களோ…
என்றைக்கு மக்கள்
குடியுரிமை பிரச்சனைகள்
தீர்க்கப்படுகின்றனவோ…
என்றைக்கு
கொள்ளை நோய்களும்
கொத்துக் கொத்தான மரணங்களும்
இல்லாது ஒழிகிறதோ….
எங்கே குழந்தைகள்
கொண்டாடப்படுகிறார்களோ…
எங்கே போர்களின் பீரங்கி
சத்தங்கள் ஓய்கிறதோ…
ஏவுகணைகள் இயல்பிழந்து
தூக்க நிலைக்கு வருகின்றனவோ…
என்றைக்குப் பாலியல்
சீண்டல்கள் ஒழிகின்றனவோ…
என்றைக்கு
ஆசிரியர் மாணவர் நல்லுறவு
மீண்டும் பூக்கிறதோ…
என்றைக்கு சிறார்கள் சிறைச்சாலை
மூடப்படுகிறதோ…
என்றைக்கு
அரசாங்கமே மக்களைச்
சுரண்டுவது ஒழிகிறதோ…
என்றைக்கு
எல்லோரும் தன்னிறைவு பெற்று
வாழ்க்கையில் சிரிக்கின்றார்களோ…
அந்நாளே உண்மையான மகிழ்ச்சியின் நாள்.

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!