நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, மனிதர்களையும், விலங்குகளையும் வேட்டையாடி வரும் புலியை, விலங்குகளின் உடல் வெப்ப நிலை மூலம் கண்டறியும் அதிநவீன கேமரா மூலம் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கால்நடை களையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், 20க்கும் மேற்பட்ட அதிரடி படையினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் உட்பட பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, புதர்களில் பதுங்கியிருக்கும் விலங்குகளின் வெப்பநிலை மூலம் அவற்றை கண்டறியும் அதிநவீன கேமரா பயன்படுத்தப்படுகிறது.
இதன் அடிப்படையிலும் புலியை தேடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராவை கொண்டு வனப்பகுதிக்குள் சென்று புலியை கண்டறியும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 3 பேர் கொண்ட கேமரா குழுவினர் சிங்காரா வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.