20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக நிதிநிலை குறித்து இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்து. ஆளுநர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி, ஜூலை மாதம் வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியாக இருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்னர், கடந்த 2001ஆம் ஆண்டு, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு பொது வெளியில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார். அதில், தமிழ்நாட்டின் கடன் சுமை எவ்வளவு என்ற தகவல் தெரியவரும்.
2001ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பை இழந்தபோது ரூ.34,540 கோடியாக கடன் இருந்தது. அதே ஆண்டு, அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், ஆகஸ்டு 18ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று, நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டது. 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிவடையும்போது, கடன் அளவு ரூ.63,848 கோடியாக அதிகரித்தது. அடுத்து, 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி நிறைவடையும்போது, கடன் அளவு 1.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. பிறகு, 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் கடன் அளவு ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்தது.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த நிலையில், 2021ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் கடன் அளவு 4.85 லட்சம் கோடியாக அதிகரித்தது. மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், இடைக்கால பட்ஜெட்டை அதிமுக தாக்கல் செய்தபோது, தமிழகத்தின் கடன் அளவு 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கடன் அளவு ரூ.5.70 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் கடன் அளவு 1,305 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, 13 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, கொரோனா பாதிப்பால் அரசுக்கு வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவு அதிகரித்துள்ளது. எனவே, கடன் அளவு எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.