“வாரிசு அரசியல்” வைகோ செய்தது தவறில்லை.. ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கையில் – காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு
“வாரிசு அரசியல்” வைகோ செய்தது தவறில்லை..மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அக்கட்சியினர் அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்கியதில் எவ்வித வாரிசு அரசியலும் இல்லை. வாரிசு அரசியல் என்பது ஒருவரை திணிப்பது ஆகும். துரை வையாபுரிக்கு பதவி வழங்கப்பட்டது தொண்டர்களின் விருப்பப்படியே நடந்தது ஆகும் என்று விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் மதிமுக கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.தற்பொழுது மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் இதனையடுத்து கோவை மாவட்ட சேர்ந்த மேலும் இரண்டு நிர்வாகிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ நீதி கேட்டு பயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால் தற்பொழுது அவரே வாரிசு அரசியலுக்கு வழி வகுத்துள்ளார். இதனை ஏற்க இயலாது என்று அக்கட்சியிலிருந்து விலகியவர்கள் கூறியுள்ளனர். இந்த சூழலில் மருதுபாண்டியர்களின் 150வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் மரியாதை செலுத்திய காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கூறியதாவது, “அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் என்பதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்களின் கையிலேயே உள்ளது.
பிற கட்சிகளை போன்று தான் மதிமுகவிலும் வைகோ நடைமுறைபடுத்தி உள்ளார். மதிமுகவில் வைகோவின் மகன் நியமனம் செய்யப்பட்டு இருப்பது ஒன்றும் தவறில்லை. தேர்தலில் கூட்டணி கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதலமைச்சர் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். உள்ளாட்சி தேர்தலை போன்று நகர்ப்புற தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தலிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி என்றும் தொடரும்” என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கையில் – காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு.