நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 1,468 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார்.
ஜனவரி 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படுவதாகவும், பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். அதேபோல பிப்.5ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை எனவும், பிப்.7ம் தேதி மனுவை வாபஸ் பெற இறுதி நாள் என்றும் அதேபோல வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதி நடைபெறம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நடைபெற்று வருகிறது. நேற்று தை அமாவாசை என்பதால் பல்வேறு பகுதிகளில் வேட்பு மனு தாக்கல் களை கட்டியது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை 1,468 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நேற்று மட்டும் ஆயிரத்து 369 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.