நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக நவ.1-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தகவல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நவம்பர் 1-ல் வெளியிடப்படும் என கோவையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமை வகித்து பேசியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் 1-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் தேவையான அளவு கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இக்கூட்டத்தில் அளிக்கப்படும் பயிற்சியின் வாயிலாக தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும், நடவடிக்கைகளையும் முழுமையாக அறிந்து தேர்தல் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.