தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு ஏதுவாக சென்னையில் இருந்து இன்று 3,640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை (04.11.2021) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில்
சிறப்பு பேருந்துகள்
ஒவ்வொரு ஆண்டும் இயக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் இருந்து நேற்று முன்தினம் முதல் 10,240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. அதன்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கூடுதலாக 388 சிறப்பு பேருந்துகளும், நேற்று 1,575 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தீபாவளியன்று சொந்த ஊர்களில் இருப்பதற்கு ஏதுவாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், சென்னையில் இருந்து கூடுதலாக 3,506 சிறப்பு பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 3,371 சிறப்பு பேருந்துகளும் புறப்பட இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் பயணிகள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை தவிர, மாதவரம் பேருந்துநிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன. இந்த பகுதிகளுக்கு சென்று வருவதற்கு 24 மணி நேரமும் இயங்குவதற்கு ஏதுவாக இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றது. இதுவரை 97,717 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய காத்திருப்பதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது.