தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் மிகவும் அடிமட்டத்தில் இருந்த காரணத்தினால், அதிமுக தலைமையிலான தமிழக அரசு, அரசு பள்ளி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது.
இந்த சட்டத்திற்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கி, கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இதேபோல், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த ராஜஸ்ரீ என்ற பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “11ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்தேன், 12-ம் வகுப்பில் மட்டும் அரசு பள்ளியில் படித்து உள்ளேன். ஆனால் எனக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டு முறையை தடை செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். மேலும் மாணவி ராஜ்ஸ்ரீ உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக முறையீடு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.