செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிர்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

68views

தமிழகத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடு உயர்த்திட வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஜூலை 20) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“தமிழகத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடு உயர்த்தவும், இருபோக சாகுபடி நிலங்களை 10 லட்சம் ஹெக்டேரிலிருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தவும், கிராம வாரியாக நிலங்களைக் கணக்கெடுத்து, சாகுபடிக்குத் தேவையான அனைத்துப் பாசன வசதிகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் தேவைக்கேற்ப, விதைகள், ரசாயன உரங்கள் போன்ற வேளாண்மை இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் விரிவாக்கப் பணிகள் தொய்வின்றி விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பருத்தி, சூரியகாந்திப் பயிர்களில், உரிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி, இப்பயிர்களின் உற்பத்தித் திறனை உயர்த்தி, அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம்பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் வயல்களில் மழைநீரினைச் சேமிக்க பண்ணைக் குட்டைகள், தொகுப்பு அணுகுமுறையில் நுண்ணீர்ப் பாசனத்திட்டம், விவசாயிகளை ஒருங்கிணைத்து, சிறுதானியங்களில் சிறப்பு இயக்கம், இயற்கை விவசாய முறையினைப் பிரபலப்படுத்துதல், தோட்டக்கலைப் பயிர்களுக்குத் தனிக் கவனம் செலுத்திட வேண்டும்.

அபரிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தியைப் பாசனத்துக்குப் பயன்படுத்திட ஏதுவாக அதிக அளவில் சூரியசக்தி பம்புசெட்டுகள் நிறுவ வேண்டும். உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களைச் செயல்விளக்கங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்களில் உற்பத்தியை உயர்த்தவும், தமிழக மக்களின் வசதிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் அரசு தாவரவியல் பூங்காக்களை நன்கு பராமரிக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்குச் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும். விளைபொருட்களைச் சேமித்து வைப்பதற்கு ஏதுவாக சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட அனைத்து உழவர் சந்தைகளும் நல்ல முறையில் இயங்கவும், இந்த நிதியாண்டில் புதிய உழவர் சந்தைகளை உருவாக்கவும், செயல்படாமல் இருக்கும் உழவர் சந்தைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது விவசாயப் பணிகளுக்குப் போதிய அளவு ஆட்கள் கிடைக்காத காரணத்தாலும், விவசாய உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும், வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்க ஏற்பாடு செய்தல் மற்றும் புதிய இயந்திரங்கள் / வாகனங்களை மானியத்தில் வழங்குதல் வேண்டும்”.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

மேலும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கு மின்னணு ஏல முறை அறிமுகம் செய்தல், ஒரு மாவட்டம் – ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையின்படி, உற்பத்தியை உயர்த்தி, அதற்கான மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகளை உருவாக்குதல், படித்த இளைஞர்களை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண் தொழில் முனைவோர்களாக உருவாக்குதல், அனைத்து கிராம வேளாண் மறுமலர்ச்சித் திட்டம் போன்ற தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!