சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. முழு பின்னணி!
தமிழ்நாட்டில் கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் மழை தீவிரம் எடுத்து உள்ளது. நேற்று இரவு கொஞ்சம் பிரேக் எடுத்த மழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் தமிழ்நாடு நோக்கி நகர உள்ளது.
இதனால் இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் சென்னையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 2015க்கு பின் சென்னையில் மீண்டும் 205 மிமீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னை தவிர்த்து மற்ற சில மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் பல இடங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்றும் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட இந்த 14 மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். சென்னைக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நாள் முழுக்க திருச்சியில் கனமழை பெய்தது. இந்த நிலையில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் திருச்சி உள்ளிட்ட இந்த 7 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும்.