செய்திகள்தமிழகம்

கோடநாடு கொலை வழக்கில் சயானிடம் போலீஸார் மீண்டும் விசாரணை

50views

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். வழக்கு விசாரணை, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளும் ஜாமீனில் உள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்த வழக்குக்காக ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் அரசின் சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர்.

கடந்த 13-ம் தேதி இவ்வழக்கு விசாரணை வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

இந்நிலையில், சயானிடம் மீண்டும் விசாரணை நடத்த கோத்தகிரி போலீஸார் சம்மன் அனுப்பினர். அதில் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக அவருக்கு தெரிந்த ரகசிய தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கோத்தகிரி போலீஸார் முன்பு சயான் நேற்று நேரில் ஆஜரானார். உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பழைய அலுவலகத்தில் விசாரணைநடந்து வருகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், குன்னூர் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ், கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய விசாரணை, சுமார் 3 மணி நேரத்துக்குமேல் நடந்தது. 3 ஆண்டுகளுக்குப் பின்பு இவ்வழக்கு விசாரணை, மீண்டும் முதலில் இருந்து தொடங்கியுள்ளதால், பல்வேறு கூடுதல் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!