எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் இல்லம் மற்றும் அலுவலகம் என சுமார் 60 இடங்களில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். வேலுமணியின் இல்லம், அவரது சகோதரர்கள் அன்பரசன், செந்தில்குமார், பொறியாளர் சந்திரபிரகாஷ், மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேலுமணியின் சுகுணாபுரம் இல்லத்தில் 12 மணி நேரம் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் வங்கி லாக்கர் சாவியை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் எஸ்.பி. வேலுமணியிடம் கைப்பற்றப்பட்ட லாக்கர் சாவியைக் கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வந்த குழு கணக்கு வைத்துள்ள வங்கியில் சோதனை நடத்தியுள்ளனர்.வங்கி லாக்கர் கடைசியாக எப்போது திறக்கப்பட்டது என்பது குறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களைப் பெற்றுச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.