104views
மனித வாழ்வியலின் தற்போதய நிலை, மாற்றங்கள், தலைமுறை இடைவெளிகள், உடல் மற்றும் மனநலம் சார்ந்த உளவியல் என தற்காலத்தில் முதியவர் சந்திக்கும் பிரச்சனைகளை அலசி ஆராயும் ஒரு நேர்மறைச் சொற்பொழிவை நண்பர், இலக்கியவாதி, பட்டி மன்ற பேச்சாளர் ரவி நவீனன் அவர்கள் 16/06/25 அன்று மாலை அண்ணா நூலக கட்டிடத்தில் நிகழ்த்தினார்கள்!
மனித குலத்தின் பேரரிய கண்டுபிடிப்புகளோடு, ஒப்புரவுடன் வாழும் கலையையும் கற்றுத் தேர்ந்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற மூதுரைக்கேற்ப வாழ்ந்து பண்பட்ட நம் தலமுறைகளின் இன்றைய நிலை; மாறி வரும் இளைய சமுதாயத்தின் அதிவேக வாழ்க்கை முறை; மின்னணு சாதனங்களினால், நம் ஒப்பற்ற வாழ்வியலை ஏற்க இயலாத அவர்களின் உளவியல்; அதனால் ஏற்படும் தலைமுறை இடைவெளிகள்; இவற்றையெல்லாம் கண்டு உணர்ந்து சீரணிக்கமுடியாமல் தவிக்கும் கடந்த தலைமுறை முதியவர்களின் கவலைகள்; இவற்றை சீரான மற்றும் உரிய உதாரணங்களோடு ரவி அவர்கள் ஆற்றொழுக்காக பேசி, இந்த அவல நிலை மாறுவதற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை விவாதித்து, நமக்கு ஒரு மனத்தெளிவை உண்டாக்க முயலும் நல்ல மாலையாக கடந்தது.
ரவி அவர்களுக்கு நல்ல கருத்துகளை பிறர் மனம் புண்படாமல் பேசும் சாதுரியத்தை எளிதாக கைவரப்பெற்று சிறந்த பேச்சாளராக அவர் உருவெடுத்திருக்கிறார்! அவருக்கு என் வாழ்த்துகள்!
மூன்று முத்தான மின் இதழ்களின் ஆசிரியர் ராம்கி அவர்கள் ரவி அவர்களைப் பாராட்டி, பொன்னாடை மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தார்கள்!
பயனற்ற செய்திகளையும் அர்த்தமற்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் சின்னத்திரையில் கண்டு பொன்னான நேரத்தை வீணடிக்காமல், சமுதாயத்தை மேம்படுத்த எண்ணும் ஒரு இனிய பேச்சாளனின் அர்த்தமுள்ள பேச்சைக் கேட்ட மகிழ்ச்சியில், வீடு திரும்பினோம்!
– பொ.வெ.இராஜகுமார்.
add a comment