சினிமா

இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026

92views
‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும். தமிழ் இலக்கியத்தின் திசைவழிப்போக்கை மாற்றியதில் தலித் இலக்கியத்திற்கு முக்கியப் பங்குண்டு. அதில் பெரும் பங்காற்றிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரைக் கௌரவிப்பதும், அவர்களது படைப்புகளை ஆய்வுநோக்கில் நினைவுகூர்வதும் ‘வேர்ச்சொல் இலக்கிய விருதின்’ நோக்கமாகும். அதன் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டுக்கான ‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ அறிஞர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு எழுத்தாளர், கலை விமர்சகர் இந்திரன் அவர்களுக்கும், 2024ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர் பாமா அவர்களுக்கும், 2025ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் ப.சிவகாமி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இலக்கிய ஆளுமைகள் குறித்த ஆவணப்படம், தொகுப்பு நூல், அவர்களது படைப்பாக்கம் குறித்த விரிவான கலந்துரையாடல் ஆகியவற்றுக்குப் பிறகு ஒரு இலட்சம் ரூபாய் காசோலையோடு ‘வேர்ச்சொல் விருது’ அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டிற்கான (2026) ‘வேர்ச்சொல் விருது’ கவிஞர், நாடகக் கலைஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது . சமவெளியின் நாகரிக வாழ்வால் செரிக்கப்படாத பழங்குடி சொல்மரபை நவீன தமிழ்க் கவிதைக்கு அறிமுகப்படுத்தியவர் என்.டி.ராஜ்குமார். அவரது கவிதைகள் வடிவத்தால் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்தாலும் தமிழில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. வைதீக மதங்களையும், அதன் பொய்க்கதைகளையும் கலைத்துக் காட்டுவதோடு, பூர்வக்குடிகள் தங்களுக்கெனச் சொந்தமாகக் கொண்டிருந்த பெரும் பரப்பைத் தன் கவிதைக்குள் விரித்துக் காட்டின. நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ‘வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை’ இரண்டு நாட்கள் நிகழ்வாக வரும் ஏப்ரல் 18, 19 தேதிகளில் சென்னை முத்தமிழ்ப் பேரவை, டி.என்.இராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. கூடுகையின் இரண்டாம் நாள் (19.04.2026) மாலை நான்கு மணியளவில், 2026ஆம் ஆண்டுக்கான வேர்ச்சொல் இலக்கிய விருதை, கவிஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!